விளக்கு வைத்து இரண்டு நாழிகைதான். வீரகனூரில் ஊரோசை அடங்கிவிட்டது. தெருவாசலில் அவிழ்த்துப் போட்ட நெல் வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. வெள்ளி முளைக்கிற நேரத்திற்குக் கட்டி, வெய்யில் வேளைக்கு ஆத்தூர் போய்ச் சேர்ந்துவிட வேண்டியதற்காக, இரவே மூட்டைகளை ஏற்றித் தயாராக இருந்தன. மாடுகள் வைக்கோல் தின்றபோது அசைந்த கழுத்து மணிகளுடைய சத்தம் ஒரே தினுசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. வண்டிக்காரர்கள் வீட்டுத் திண்ணைகளிலும் குறடுகளிலும் படுக்க யத்தனம் செய்துகொண்டிருந்தார்கள்.