Monday, October 18, 2021

கதை மூலம் - கு. ப. ரா.

நதிமூலம் ரிஷிமூலம் என்பார்களே, அந்த மாதிரி, கதை மூலம் என்றும் ஒன்று உண்டு. அதைப்பற்றி அதிகம் கிளறாமல் இருப்பதே சிலாக்கியம். கிளறினால் கதை எழுதியவனுடைய அந்தரங்கமான அநுபவங்கள், எத்தனை அம்பலத்துக்கு வரவேண்டி இருக்குமோ!

கேட்டதற்கு இல்லை என்று சொல்லாமல் நான் என்னுடைய கதை ஒன்று உதித்ததற்கு வெளிப்படையாக ஏற்பட்ட ஒரு காரணத்தை எழுதி அனுப்பினேன். ஆசிரியர் அதை மறுதபாலில் திருப்பி அனுப்பி, ‘கலைமகள் வாசகர்கள் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை’ என்று எழுதினார்.

உண்மையாகவே எனக்குக் கவலை உண்டாகிவிட்டது. கலைமகள் வாசகர்கள் எதிர்பார்க்கும் உண்மைகளை நான் எப்படிச் சொல்வது? என்னுடைய அநுபவமும் அதன் பயனான கதையும் மேன்மை பெறப்பெற என்னுடைய மனத்தின் அந்தஸ்தும் பெருமையும் குன்றிவிடுகின்றன என்பது முதல் உண்மை.

சரி, சொல்லுவதென்று ஆரம்பித்தாயிற்று. தலைக்குமேல் ஜலம் சாணானால் என்ன, முழமானால் என்ன?

மண்ணிலிருந்துதானே மலர் பிறக்கிறது? இதே நியதி எல்லா அழகுப் பொருள்களுக்கும் இருக்கிறது என்பதும் தெரிந்த விஷயம்.

சென்னையில் என்னுடன்கூட நான் இருந்த வீட்டில் ஒரு நண்பர் குடியிருந்தார். அவர் ரஸிகசிரோமணி. வீடு கூட்டுவதற்கும் வேலை செய்வதற்கும் ஒரு பெண். அவளுக்குச் சுமார் பன்னிரண்டு வயசுதான் இருக்கும். ஆகவே வெகு சிறுபெண். பார்ப்பதற்கு ‘மூக்கும் முழியுமாக’ நன்றாக இருப்பாள். அவ்வளவு அழகு வாய்ந்த பெண் அவ்வளவு வறுமையில் இருந்ததைக் கண்டபோது என் நண்பருக்குக் காளிதாஸன் சுலோகம் ஞாபகம் வந்தது. ‘ஸரஸிஜம் அனுவித்தம் சைவலேனாபி ரம்யம் . . .’

ஆகையால் சம்பளத்தைத் தவிர அவளுக்கு எங்களிடமிருந்து தினம் சராசரி நாலணாக் கிடைக்கும். என் நண்பர் என்னைப் போன்றவர் அல்ல. பேச்சில் பிரியம் கொண்டவர். ஆகவே அடிக்கடி அவள் பிறப்பு, பூர்வோத்தரம், குடும்ப சமாசாரங்கள் எல்லாவற்றையயும் விசாரிப்பார். இப்படித் தன் புருஷர் அவளுடன் பேசியது, என் நண்பர் மனைவிக்கு எதனாலோ அசூயையை உண்டாக்கிவிட்டது. அந்தப் பெண், வேலையே செய்வதில்லையென்று சாக்கு வைத்து அவளை நிறுத்திவிட்டு வேறு வேலைக்காரி ஒருத்தியை ஏற்பாடு செய்தாள்.

தன்னுடைய அசூயையை அவள் மறைக்கவில்லை. ‘எப்பப் பார்த்தாலும் அந்தக் குட்டியோட என்ன பேச்சு? சம்பந்தம் பண்ணிக்கப் போரேளா? நன்னாருக்கு! நீங்கள் இப்படி இடங்குடுத்துத்தான் அவள் வேலையே செய்வதில்லை. என்னால் ஆகிறதோ எல்லாம் செய்ய! அழகு பாக்கிறதுக்கா வேலைக்காரி’ என்ற மாதிரியில் பேசினாள்.

அவ்வளவு சிறிய பெண்ணிடம் தன் புருஷர் பேசியதைக் கண்டு அந்த அம்மாளுக்கு ஏன் அசூயை ஏற்பட்டது? பெண் இயற்கைதான் போலும்! புரூரவஸ் ஒரு சிறு வித்தியாதரப் பெண்ணைக் கொஞ்சம் உற்று நோக்கினான் என்று ஊர்வசி கோபங்கொண்டு அவனை விட்டுப் பிரிந்தோடியதாகக் காளிதாஸர்கூட எழுதியிருக்கிறார்.

இந்த அநுபவத்தை ஆதாரமாகக் கொண்டது என்னுடைய கதை ‘மின்னக்கலை.’ அதில் மின்னக்கலை, யௌவனஸ்திரீ. அவளுக்கு ஆதரவாக இருப்பதற்காக அவளிடம் அதிக விலை கொடுத்துப் புல்லுக்கட்டு வாங்கிய பேர்வழி அவளிடம் வாத்ஸல்ய பாவத்துடன் நடந்துகொண்டார். அவளைத் தம் பெண் போலப் பாவித்தார். அவருக்குக் குழந்தை குட்டிகள் இல்லை. ஆனால் அவர் மனைவிக்கு அவர் மனோபாவம் அர்த்தமாகவில்லை. இளம் பெண் ஒருத்தியிடம் தன் புருஷர் அன்புடன் நடந்துகொண்டால் அது தப்பான எண்ணமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவள் துணிபு.

இந்த அநுபவத்தை ஒட்டி, உண்மையாகவே ஒருத்தி புருஷன் மற்றொரு பெண்ணைச் சுயபுத்தியுடன் பார்த்தால், மனைவியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைப் ‘பெண் மனம்’ என்ற கதையில் ஆராய்ச்சி செய்ய முயன்றிருக்கிறேன்.

நான் முதல் முதலாக எழுதிய கதை நூர் உன்னிஸா. நான் திருச்சியில் மூன்றாவது பாரத்தில் படிக்கும்பொழுது என்னுடன்கூட மகமது அலி என்ற முஸ்லிம் பையன் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்குக் கணக்கு வராது. நானும் அப்படிக் கணக்கில் புலியல்ல. ஆனால் சனிக்கிழமைதோறும் அவன் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய், கணக்குப் போட்டுக் கொடுக்கச் சொல்லுவான். அந்த மாதிரி ஒரு தடவை போன பொழுதுதான் நூர் உன்னிஸாவின் மூல விக்கிரகத்தைப் பார்த்தேன். அவ்வளவு அழகான சிறுமியை நான் இன்னும் பார்க்கவில்லை. அன்று பார்த்த அவள் முகமும் சாயலும் என் இளம் உள்ளத்தில் அப்படியே பதிந்துவிட்டன. இருபது வருஷங்களுக்குப் பிறகும் அவை என் மனத்தில் தங்கி நூர் உன்னிஸாவின் வர்ணனையாக அமைந்தன. அந்தக் கதையில் பாக்கி எது கற்பனை, எது உண்மை என்று நான் சொல்ல வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

என் கதைப் புத்தகத்தை விமரிசனம் செய்தவர்களில் யாரோ ஒருவர் நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் - இவற்றைப் பற்றித்தான் எழுதுகிறேன் என்று எழுதிய ஞாபகம். இது குற்றச்சாட்டானால் நான் குற்றவாளிதான். நான் கவனித்த வரையிலும் என் அநுபவத்திலும் வாழ்க்கையிலும் அவைதாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றன.

‘கண்டதை எழுதுவதுதானா கதை?’ என்று கேட்கலாம். கதை உருவாகும்பொழுது கண்டது மட்டுமன்றிக் காணாததும் தங்கத்துடன் செப்புச் சேருவதுபோல் சேருகிறது. அந்த அநுபவமும் காந்தத் துண்டு போலத் தான் இழுக்கக்கூடிய பல சிறு இரும்புத் தூள்களைப் போன்ற நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் ஆதரித்துக்கொள்ளுகிறது. தத்துவங்கள் ஆசிரியனுடைய அநுபவம் என்ற உலையில் அடிபட்டுப் பல்வேறு உருக்களில் கதைகளாக மாறுகின்றன.

சில கதைகளில் என் சொந்த அநுபவங்கள் கூடுதல் குறைவின்றி அப்படியே அமைந்திருக்கின்றன. ‘பண்ணைச் செங்கான்’, ‘புரியும் கதை’, ‘எதிரொலி’, ‘விடியுமா’, ‘தை - அடடா!’ என்ன சொல்லுகிறேன்! அந்தரங்கத்தையே திறந்து காட்ட ஆரம்பித்துவிட்டேனே! முழுதும் சொன்னேனானால் கலைமகள் வாசகர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? பிறகு நான் கலைமகளில் தலைகாட்ட முடியாது. இப்பொழுது என்ன குறைவாகவா சொல்லியிருக்கிறேன்?

***

கலைமகள், பிப்ரவரி 1943

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.