தனபாக்கியம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து தூக்கி வாரிப் போட்டது போலப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். பக்கத்தில் தான் எழுந்திருந்ததையும் உணராமல், ஷண்முகசுந்தரம் மனசை எங்கோ செலுத்தினவனாய் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள்.
“அப்போது முதலா தூங்காமல் உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டுக்கொண்டு மெதுவாக
அவனுடைய தோளின் மேல் சாய்ந்தாள்.
“ஆ! என்ன சொல்கிறாய்? நீ
ஏன் எழுந்திருந்தாய்?” என்று அவன்
கேட்டபோது குரல் அவளைக் கொஞ்சம் கலக்கிவிட்டது.
“என் தூக்கத்திலும் நீங்கள் படுத்துக்கொள்ளாதது போன்ற ஓர் உணர்ச்சி மனசில்
தட்டி என்னை எழுப்பிவிட்டது. ஏன் இன்னும் தூங்கவில்லை?”
“தூக்கம் வரவில்லை. இந்த இரவின் நிச்சப்தமான ஆச்சரியத்தை ஆராய்ந்துகொண்டு
உட்கார்ந்திருக்கிறேன். இதே சாந்திமயமான பொழுதில் உலகத்தில் எவ்வளவு கொடிய
செய்கைகள் நடைபெறுகின்றன! எவ்வளவு உயிர்கள் நிம்மதியற்றுக் கலங்குகின்றன!”
“அந்த எண்ணங்கள் நமக்கு வேண்டாம் நக்ஷத்திர வெளிச்சத்தால் சற்றே ஏற்றப்பட்ட
இந்த மையிருட்டின் மத்தியிலும் என்ன ஆனந்தக் கூத்து! பவழ மல்லிகையின் வாஸனை
கீழேயிருந்து மூச்சுக் காற்றுப்போல் விட்டுவிட்டு வருகிறது; பாருங்கள்! இந்தக் கரிச்சானுக்குப் பாட்டு சாதகம்
செய்ய இதுதான் சரியான பொழுதோ? திருப்பித் திருப்பி, சங்கதிகள்
போட்டல்லவோ பாடம் பண்ணுகிறது!”
“இவ்வளவு ஆனந்தத்திற்கும் எல்லை இருக்கிறதுபோல் இருக்கிறது!”
“ஆனந்தத்திற்கு எல்லையே இருக்க முடியாது. அதை அநுபவிக்கும் பிராணிகளின்
ஆயுளுக்குத்தான் எல்லை இருக்கிறது; அல்லவா?”
“உதாரணமாக நான் இப்பொழுது ஒரு சமாசாரத்தைச் சொன்னால், நீ சொன்ன இவ்வளவு வார்த்தைகளும் பொய்யாகும்.”
“அந்தச் சமாசாரம் எனக்கு வேண்டாம். எனக்கும் தூக்கம் கலைந்துவிட்டது. ஏதாவது
கதை சொல்லுங்களேன்” என்று தனம் இன்னும் சற்று நெருங்கி உட்கார்ந்துகொண்டு
கொஞ்சினாள்.
“நாம் இப்படியே, கழுத்தில்
கைகளைப் போட்டு அணைத்துக்கொண்டு...”
“இப்படியே - இருந்துவிட்டால்?” என்று முகத்தோடு முகம் வைத்துக் கேட்டாள்.
“இப்படியே இறந்துவிட்டால்! - நமது அன்பு சாசுவதமாகிவிடும். அதில் ஒருவித
மாறுதலும் ஏற்பட முடியாது.”
“அதேன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவள் திடுக்கிட்டுக் கேட்டாள்.
“அதென்னமோ, அப்படித்
தோணுகிறது எனக்கு; உனக்கு ஒரு
கதை சொல்லட்டுமா; கேட்டாயே?”
“சொல்லுங்கள்.”
“பார்பிரியா என்பவள் யௌவனம் பொங்கிய கட்டழகி; உன்னவ்வளவு உடலழகு உள்ளவள் என்று வைத்துக்கொள்ளேன்-”
“போங்கள்!”
“இப்பேர்ப்பட்ட ஓர் இருளிரவில், ரகசியமாகத் தன்னை எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்த காதலனிடம் சென்றாள்.
அவனுடைய போற்றுதலில் ஈடுபட்டாள். அவன் கண்களாலும் கைகளாலும் இதழ்களாலும் அவளைத்
துதித்து அகமகிழ்ந்தான். நாணத்துடன் நகைத்து நின்றவள், பூப்போல மலர்ந்து இளகி மறைந்து கிடந்த தன் இச்சையை
மணம்போல் ‘கம்’மென்று சொரிந்து பரவசமடைந்தாள். காதலன் வெறி கொண்டுவிட்டான்.
அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் வாழ்வில் அந்த நிமிஷம் மறுமுறை
கிடைக்கத் தகாதெனத் தோன்றிற்று அவனுக்கு. அதை அப்படியே அழிவற்றதாகச் செய்துவிட
வேண்டுமென்று எண்ணினான். என்ன செய்தான் தெரியுமா?”
“எவ்விதமானாலும் உன்னை மணந்துகொள்ளுகிறேன் என்றானோ?”
“என்ன செய்தான் தெரியுமா, அந்த
மையல் பித்தன்? அவளது நீண்ட
கூந்தலை அவிழ்த்துவிட்டான். காதலி பெருமைப் புன்னகை பூத்தாள். அதைக் கையில்
பற்றிக் கழுத்தைச் சுற்றி அழகு பார்த்து மயங்கினான். ‘அன்பே, இதே சாவற்ற நிலை!’ என்று அப்படியே கூந்தலை
நெருக்கிச் சுருக்கிட்டான்!”
“ஐயோ பாவம்! அப்படியா முடிந்தது அந்தக் காதல்?”
“முடியவில்லை. அது தழைக்க முடியாத ஓர் உலகத்தை மீறிச் சென்றுவிட்டது.”
“காதல் தழைப்பதற்கு உலகத்தில் இடையூறுகள் உண்டா?”
“உண்டு; உதாரணமாக உன் தாய்
என்னை இங்கு வர வேண்டாமென்று தடுத்துவிட்டால்?”
“எதற்காக? நன்றாயிருக்கிறது!
அவள்தானே-”
“அப்படிச் செய்யக் காரணங்கள் ஏற்பட்டால்?”
“காரணங்களும் வேண்டாம், கதைகளும்
வேண்டாம். போதும், இப்படித்
தூங்குங்கள்” என்று அவனைத் தன் மடிமேல் சாய்த்துக்கொண்டாள்.
“வாஸ்தவம். சந்தர்ப்பம் நெருங்குகிற வரையில் காலத்தை ஏன் வீண்போக்க வேண்டும்?”
“நீங்கள் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் இன்றைக்கு? எனக்கு அப்புறம் - தெரியுமா?”
ஷண்முகசுந்தரம் அவளை மேலே பேச விடவில்லை.
2
“அடி தனம்! இனிமேல் அந்தப் ‘பரதைப்பயல்’ இந்த வாசல் நுழையக் கூடாது, தெரியுமா?” என்று தனத்தின் தாய் கமலம் வெடுக்கென்று பேசினாள்.
தொழிலில் கண்ணும் கருத்துமுடையவள் அவள்.
“என்னம்மா சொல்கிறாய்?”
“சம்முகசுந்தரத்தைத்தான்! இனிமேல் இங்கே வரக் கூடாது என்கிறேன்” என்றாள் தாய்.
“ஏன்?” என்று கோபத்துடன்
கேட்டாள் மகள்.
“அவன் அரைக்காசற்ற அநாதை. நாம் ஏமாந்துபோய்விட்டோம். அவன் பொய்
சொல்லிவிட்டான்.”
“யார்?”
“அவனும் அந்த அயோக்கியன் மாணிக்கமுந்தான்.”
“என்னவென்று?”
“இவன் ஒரு பெரிய மைனர் என்றும் கல்யாணமாகாதவன் என்றும் மாணிக்கம் என்னிடம்
சொன்னான்.”
“எப்பொழுது?”
“நேற்று மாணிக்கம் இங்கு வந்திருந்தான். என்னை க்ஷேமம் விசாரித்தான்
‘மாப்பிள்ளை சௌக்கியந்தானே?’ என்று
குத்தலாகக் கேட்டான். ‘சௌக்கியந்தான்’ என்றேன். ‘உனக்குத் திருப்திதானா?’ என்று கேட்டான். ‘எனக்குக் கோபம்
வந்துவிட்டது’ என்றேன். ‘உங்கள் மைனர் மாப்பிள்ளை, தான் பிச்சைக்காரனென்று உங்களிடம் இன்னும் சொல்லவில்லையோ?’
என்றான். மறுபடியும் ‘உனக்கென்ன?’
என்றேன். அதற்கு என்ன பதில் சொன்னான்
தெரியுமா? போன வருஷம்
டாக்கியில் நீ அவனுடன் ஆடினபொழுது அவன் உன்பேரில் ஆசை கொண்டானாம். உன்னைக்
கேட்டானாம். நீ மறுத்து விட்டாயாம். அதற்குப் பழியாக உனக்கு ஒரு பரதேசியைக் கொண்டுவந்து
விட்டு ஏமாற்றி அவமானப்படுத்த வேண்டுமென்று தீர்மானித்தானாம்.”
“அதற்காக?”
“இவனைக் கொண்டுவந்து விட்டானாம்.”
“பேஷாயிருக்கிறது, அவன்
பொய்! நாங்களேயல்லவோ முதல் முதலாகத் தியேட்டரில் சந்தித்தோம்!”
“அவன்தானாமடி அப்படிச் சந்திக்கும்படி ஏற்பாடு செய்தானாம்.”
“நீ சுத்த அசடாயிருக்கிறாயம்மா. அவன் செய்யவாவது? என் மனசை ஆக்க அவனால் ஆகுமா?”
“பின் எப்படி அவனுக்குத் தெரியும்? மறுநாள் என்னிடம் வந்து, ‘அவன் மைனராக்கும்; கல்யாணம்
ஆகாதவனாக்கும்’ என்றானே? உன்னிடம்
தான் ஏழையென்று அவன் சொன்னானோ?”
“இல்லை. ஆனால் அவசியம்?”
“அவசியமா? உனக்கு என்ன
பைத்தியமா? இன்று அவன் வந்தால்
வீட்டைவிட்டுத் துரத்து, தெரியுமா?”
என்று கமலம் போதித்துவிட்டு வெற்றிலை
மென்றுகொண்டு வாசலுக்குப் போய்விட்டாள்.
3
“தனம், தனம்! ஏன் இப்படி
இருக்கிறாய்? என்ன கோபம்
உனக்கு?”
“கோபம் என்ன இருக்கிறது? ஒன்றும்
இல்லை.”
“அப்படிச் சொல்லிக்கொண்டே உன் மனசை ஒளித்து மனஸ்தாபப்படுகிறாயே? என்ன காரணம்?”
“நீங்கள் மனசை ஒளித்துப் பழகி எனக்கு வழிகாட்டி விட்டீர்கள்.”
“நான் என்ன ஒளித்தேன்? என்னிடம்
ஒன்றும் இல்லையே ஒளிப்பதற்கு?”
“நீங்கள் பணக்காரர்களா?”
“இல்லை. நான் ஏழைப் புலவன். ஆ! என்னை வெறுக்கிறாயல்லவா?”
“ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?”
“நீ பணத்தை விரும்புவது சகஜந்தானே?”
“என் ஜாதிக்குச் சகஜம் என்று சொல்லிக் காட்டுகிறீர்களா? என் ஜாதி ஸ்வபாவத்துடனா நான் உங்களை - என் குலத்து
வழக்கப்படியா உங்களை-” என்று அவள் விம்மி விம்மிச் சொல்வதற்குள் கண்ணீர் நெஞ்சை
அடைத்துவிட்டது. ஷண்முகசுந்தரம் பதறி, “இல்லை, இல்லை. நான் உன்னை
அறியவில்லையா? அறிகிறேன். நீ
ஏன் நான் பணக்காரனா என்று கேட்டாய், சொல்வாயா?” என்றான்.
“நீங்கள் ஏழையென்று ஏன் இத்தனை நாள் என்னிடம் சொல்லவில்லை?”
தான் சொல்லவேண்டிய பதில் திரும்பவும் அவளைப் புண்படுத்தும் என்று அறிந்து தலை
குனிந்துகொண்டான்.
“அதுவும் என் மேலுள்ள ஸந்தேகத்தால்தான்; ஒருவேளை நான் இகழ்வேனென்று. இல்லையா?”
“உன்மேல் நான் கொண்ட பற்று அதற்குக் காரணமென்று நீ அறியவில்லையா?” என்று மன்றாடினான்.
“இருக்கட்டும். மாணிக்கம் உங்களுக்குப் பழக்கமா? எப்படி?”
“அவன் ஆடின டாக்கிக்கு நான் சம்பாஷணை எழுதிக் கொடுத்தேன்.”
“நீங்கள் இயற்றியதா அந்தச் சம்பாஷணை?”
“உனக்குத் தெரியாதா?”
“தெரியாதே! நீங்கள் இயற்றிய சம்பாஷணையில் அவன் ஏன் என்னுடன் ஆட வேண்டும்?”
“அவனால்தான் எனக்குக் கம்பெனிக்காரர்கள் அறிமுகமாக வேண்டியிருந்தது.”
“என் தாய் சொன்னது சரிதான்!” என்று சிரித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.
“என்ன?” என்று ஆவலுடன்
கேட்டான்.
“திருடன்!”
“ஏன் சொல்லமாட்டாள்? அவள்
கண்மணியைத் திருடிக்கொண்டு விட்டேனல்லவா?”
வெளியே கமலத்தின் குரல் கேட்டது:
“அடியே அவனை வெளியே போகச்சொல்லு!”
“மாட்டேனம்மா!”
“ஆனால், இருவரும் வெளியே
போங்கள்!”
•••
மணிக்கொடி, 17-06-1934
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.