Wednesday, November 10, 2021

குந்துமணி - கு. ப. ரா.

விளக்கு வைக்கிற நேரம்; சிதறிய சில நக்ஷத்திரங்கள் பொரிவாரி இறைத்தது போல வானத்தில் கிடந்தன. ராஜலக்ஷ்மி கையிலிருந்த தம்புராவைக் கீழே வைத்துவிட்டு, இருட்டுகிறதையும் மறந்து உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ராமு நாற்காலியில் சாய்ந்தவண்ணம் யோசனையிலாழ்ந்திருந்தவன் போலப் பேச்சற்றிருந்தான்.

“உங்கள் காவிய மயக்கம் என்பீர்களே, அது இப்பொழுது வந்துவிட்டதோ” என்று தானும் மெய்ம்மறந்திருந்ததை மறைத்துக் கேட்டாள்.

“ரொம்ப நாழிகையாய் விட்டதோ? இன்று ராகமென்கிற மது மயக்கம். கடைசியாக நீ ஆனந்த பைரவியில் பாடிய ஜாவளிதான் காரணம். அது யார் செய்தது? யார் செய்தாலென்ன? குரல் கொடுத்து அதை சங்கீதமாக்குமிடத்திலல்லவா இருக்கிறது பெருமை!”

“சும்மா என்னை ஸ்தோத்திரம் செய்வதே உங்களுக்கு வேலையாய்ப் போய்விட்டது. என் பாட்டை மட்டும்.”

“அன்று சங்கீதக் கச்சேரியில் உன் பாட்டினால் கவரப்பட்டல்லவோ நான் உன் கைதியானேன்? அன்று நீ மாயா மாளவ கௌளையை ஆலாபனம் செய்துவிட்டுப் பாடிய பதம் என்னைப் பரவசமாக்கிவிட்டது.”

“என் தம்புராவின் தந்திகளை அறுத்துவிட்டு என் குரலையும் கலைத்துக்கொண்டு விடுகிறேன். பின்பாவது.”

“பின்பென்ன?”

பின்பு - அப்பொழுது என்னுடன் பேசுவீர்கள்.”

“உன்னிடம் நான் இப்படி ஈடுபட்டிருக்கும்போது வேறு பேச்சில் என்ன ருசி இருக்கிறது.”

“பேச்சென்றால் பேச்சா!”

“பின்”

“போங்கள்! என்னைச் சந்தித்து ஒரு வருஷமாகிவிட்டதால் உங்கள் மனம் சலிப்படைந்துவிட்டது.”

“ஒரு வருஷமாயிற்றா? இன்று போலிருக்கிறது. கச்சேரியின் முன் வரிசையில் நான் உட்கார்ந்திருந்தேன். ஞாபகமிருக்கிறதா?”

இல்லாமலென்ன? நீங்கள் என்னையே கண்கொட்டாமல் பார்த்ததை அநேகர் கவனிக்கும்படியும் நானே அதை உணர்ந்து தடுமாறும்படியும் செய்துவிட்டீர்கள்!”

“தம்புராவின் சுருதி வெள்ளத்தால் உன் குரல் ஒரு மீன்போலத் துள்ளிப் பாய்ந்து, மேலும் கீழும் வெகுசுலபமாகச் சஞ்சரித்ததைக் கேட்டு என்னையே மறந்தேன்.”

“அதென்ன தைரியம்? கொஞ்சங்கொஞ்சமாக நெருங்கிப் பிடில்காரர் முன் வந்துவிட்டீர்களே.”

“பாவம். அவன் உன் சஞ்சாரத்தைப் பின்பற்ற முடியாமல் வில்லை என்ன செய்வதென்று தெரியாமல் வைத்துக்கொண்டு முழித்தான்.”

“எனக்கு ஞாபகமிருக்கிறது. வெகு துணிச்சலுடன் ‘ஒரு ஜாவளி’ என்றீர்கள்.”

“நேர் விரோதமாக நீபாரமுகமேலராஎன்ற சுருட்டிக் கீர்த்தனை பாடினாய் - அடாடா! சங்கீதம் போதையைப் போல அன்று என்னை மயக்கியது. உன் குரல் சீறிச்சீறிக் கிளம்பி நாக சர்ப்பம் போல என்னைத் தீண்டி மாய்த்தது.”

“அது சரி - கச்சேரி முடிந்தவுடன் என் தாயையும் என்னையும் தொடர்ந்து வந்தீர்களே. அதென்ன போக்கிரித்தனம்!”

“நீ திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றாயே அதென்ன திருட்டுத்தனம்!”

“உங்களை வரவேற்பதில் என் தாயாருக்குக் கொஞ்சம்கூட இஷ்டமில்லை.”

“அவளிஷ்டம் எனக்கெதற்கு? உன் பார்வைகள் என்னை மௌனமாக வரவேற்றன. ஒப்புக்கொள்கிறாயா, இல்லையா?”

நன்றாயிருக்கிறது! இல்லவேயில்லை. இப்படித்தான் புருஷர்கள் பேதைப் பெண்களின் மேல் பழி சுமத்துவது.”

“பின் ஏன் உன் தாயாருக்குத் தெரியாமல் என்னை உள்ளே அழைத்துச் சென்றாய்? அதோ முகம் அசடு தட்டுகிறது. எங்கே பார்ப்போம்” என்று அவ்விருட்டில் முகவாயைப் பிடித்து முகத்தைப் பார்க்க முயன்றான்.

ராஜலக்ஷ்மியின் குரல் சட்டென்று மாறுதலடைந்தது.

“நான் டாக்கியில் நடிக்க வேண்டுமென்பது அம்மாவின் எண்ணம். நீங்கள் அதைக் கெடுத்துவிட்டீர்களாம்.”

“குசாலாய்ப் போகிறதுதானே! யார் வேண்டாமென்கிறார்கள்? முன்பே என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் இந்தப் பக்கமே வரமாட்டேனே.”

“கோபம் வந்துவிட்டதா? அம்மா சொல்வதைத்தானே சொன்னேன்” என்று எழுந்து பக்கத்தில் போய் நின்றுகொண்டு,

அதிருக்கட்டும்... எவ்வளவு நாள் இப்படியிருக்கிறது?”

ஏன்? எப்படி?”

ஒன்றுமில்லை. அம்மாவின் உபத்ரவம்தான்.”

“......”

“எத்தனை நாள் நீங்கள் இப்படி இருக்கக்கூடும்?”

அதில் என்ன கவலை உனக்கு?”

ஒன்றுமில்லை. இப்படியே இருந்தால் போதும் - ஆனால் - ஒன்று. என் தாயாரின் உபத்ரவம் தாங்க முடியவில்லையே, நான் என்ன செய்வேன்?”

என்ன செய்கிறாள்?”

சொன்னால் நீங்கள் திரும்பவும் கோபிப்பீர்கள்.”

“இல்லை, சொல்லு!”

“எங்கள் ஜாதித் தொழிலை நான் பழக வேண்டுமென்று படுத்துகிறாள் - அதாவது நான் பொட்டுக்கட்டிக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துகிறாள்.

“அதற்கு நான் வந்துகொண்டிருப்பது தடையில்லையே?”

இல்லை, இல்லை. நான்தான் மாட்டேனென்று விட்டேனே.”

“ஏன்?”

ஏனா? உங்களுக்கு இன்னும் விஷயம் புரியவில்லையா? சொல்லுகிறேன் - என் தாயார் என்னை விலைமாதாக இருக்க வேண்டுமென்கிறாள்”

“நீ சொல்லுவது எனக்கு அர்த்தமே ஆகவில்லை. இப்பொழுது அப்படித்தானே - அதாவது - நான் -”

ராஜத்தின் முகம் வெளுத்தது. கண்கள் பயத்தால் பெரிதாகிப் பரந்தன.

“என்ன, என்ன? என்ன சொன்னீர்கள்?”

ராஜம். ஏனிப்படிப் பதறுகிறாய்?” நான் என்ன சொல்லிவிட்டேன்?”

நான் உங்களுடைய வைப்பு என்கிறீர்களா?”

அதிலென்ன உனக்குக் குறை? எந்தப் பெயரானால் என்ன?” அவன் சொன்னது ஒன்றும் அவள் காதில் விழவில்லை. கண்களில் நீர் வடிய, குழந்தை போன்ற விக்கல் குரலுடன்,

நான் - ஆனால் நான் உங்கள் தாஸிதானா?”

சுத்த அசடாயிருக்கிறாயே - பின் என்னவென்று எண்ணிக்கொண்டிருந்தாய்?”

நீங்கள் - ஆனால் - என்னை மணக்கப்போவதில்லையா?”

ராஜம்! உனக்கென்ன உடம்பு சரியாயில்லையா இன்று? ஏனிப்படிப் பேசுகிறாய், ஒன்றுமில்லாமல்?”

ஆனால் நீங்கள் கொடுத்த உறுதிகளெல்லாம் பொய்யா?”

இல்லவேயில்லை - எதைச் சொல்கிறாய்?”

நீங்கள் - என்னைத் தவிர வேறொருத்தியைக் கண்ணெடுத்துக் கூடப் பார்ப்பதில்லை என்றது -?”

சரி வா கீழே போவோம். இன்றேதோ விபரீதமாகப் பேசுகிறாய், வார்த்தைகள் வளர்ந்துவிட்டால் பிறகு -”

“வளர்வதென்னவிருக்கிறது இனிமேல்? இதற்குப் பதில் சொல்லுங்கள் - நீங்கள் என்னைக் கலியாணம் செய்துகொள்ளப் போவதில்லையா?”

நான் இப்படி உன்னிடம் ஈடுபட்ட பிறகு கலியாணம் எதற்கு?”

இனிமேல் என்னை ஏமாற்ற வேண்டாம் - நீங்கள் உங்கள் ஜாதிப் பெண்ணொருத்தியைக் கலியாணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? அல்லவா?”

அதெப்படியானால் உனக்கென்ன? உன்னிடமிருக்கிற காதல் குறைகிறதாவென்று பார்த்துக்கொள்?”

அவ்வார்த்தையைக் கேட்டதும் காதைப் பொத்திக்கொண்டு, “போதும் முடிவாக, உங்களுக்குக் கலியாணம் ஆகப்போகிறது?”

அதையேன் கேட்கிறாய்? நீ கேட்கிற தினுசைப் பார்த்தால் நான் உள்ளதைச் சொன்னால் நீ வருந்துவாயென்று நினைக்கிறேன்.”

“சொல்லுங்கள்!”

“அடி ராஜம்! இங்கே வா. உன்னை யார் இப்படி இன்று தூண்டி விட்டிருக்கிறார்கள்? உன் தாயாரா?”

சொல்லுங்கள்!”

“சொல்லாமலிருந்தால் நம் கா... அன்புக்கு நல்லதல்லவா? ராஜம்!”

“சொல்லுங்கள்!”

“சொல்லத்தான் வேண்டுமா?”

இனிமேல் வேறு வழியில்லை.”

“பின்பு உன் மனது கலங்கும். வருந்துவாய்.”

“பாதகமில்லை.”

“எனக்குக் கலியாணமாகிவிட்டது - அதோ சொல்லிவிட்டேன்.”

ராஜம் சட்டென்று அவனிடமிருந்து விலகி நின்றாள். அவளுடைய அழுகை அடங்கிவிட்டது. கண்கள் சிவந்தன.

“எழுந்திருந்து செல்லுங்கள் வெளியே!”

“ஓஹோ! ஏது குலப்பெண்ணுக்குமேற் போய்விட்டதே உனது எண்ணம்?”

நற்குணத்தில் குலப்பெண்களுக்குத்தான் உரிமையோ? ஐயோ, என் கனவுகளெல்லாம் கானலாகவா போக வேண்டும்? என்னுயிர் ஏக்கங்கள் இத்துடன் இப்படியா முடிவடைய வேண்டும்?”

ராமு மௌனமாக எழுந்து சற்று நின்றான். ராஜத்தின் உருவத்தை அணுக யோசித்தான்.

அந்தச் சமயம் ராஜத்தின் தாயார் அங்கு வந்து, “என்னடி! எவ்வளவு நேரமானாலும் தெளிவேற்படுவதில்லையோ?” என்றாள்.

“தெளிவு ஏற்பட்டுவிட்டதடி அம்மா. இதோ வந்துவிட்டேன்.”

•••

மணிக்கொடி, 05-08-1934 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.