அவராகச் சரண் புகுந்த அந்தக் காடு அவருக்கு ஒரு கூண்டாகப் போய்விட்டது.
பிரதாப்சிங் கூண்டில் அடைபட்ட சிங்கம் போல அதில் இங்கும் அங்குமாக இடைவிடாமல்
நடந்து கொண்டிருந்தார். வெறி பிடித்தது போன்ற அந்த நடையே அவர் மனம் முற்றும் வேறு
எதிலோ ஆழ்ந்திருந்ததென்பதை விளக்கிற்று.
இருட்டிக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. ஜகமே வாயடைபட்டது போலத் திடீரென்று மௌனமாகிவிட்டது. சுவர்க்கோழிகள் மட்டும்தான் இடைவிடாமல் கத்திக்கொண்டிருந்தன. தூரத்திலிருந்த ஆரவல்லி மலைகளின் சாரல் சதுப்புகளிலிருந்து கிளம்பிய “கொள்ளிவாய்ப் பிசாசுகள்” மட்டும் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. நடுநடுவே ஏதாவதொரு காட்டு மிருகம் அலறிய ஒலி கிளம்பிக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டின் மௌனத்தில் கலந்தது.